விஜயாப்புரா அருகே காங்கிரஸ் பெண் பிரமுகர் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை


விஜயாப்புரா அருகே காங்கிரஸ் பெண் பிரமுகர் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 8:53 PM GMT)

விஜயாப்புரா அருகே காங்கிரஸ் பெண் பிரமுகர் நேற்று பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜயாப்புரா,

விஜயாப்புரா மாவட்டம் கொல்ஹாராவில் கிருஷ்ணா ஆற்று மேம்பாலத்தின் அடியில் பெண் பிணம் கிடப்பதாக நேற்று கொல்ஹாரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் ரேஷ்மா படேகனூர் என்பதும், அவர் விஜயாப்புரா மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் என்பதும் தெரியவந்தது. இருப்பினும், அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்தாரா? என்பதை போலீசார் உறுதியாக கூறவில்லை. இருப்பினும் பிணமாக மீட்கப்பட்ட ரேஷ்மா படேகனூரின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பின்னர் ரேஷ்மா படேகனூரின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு நீமகவுட் கூறுகையில், ‘ரேஷ்மா படேகனூர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முதலாவதாக அவருடைய குடும்பத்தினரை அழைத்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரேஷ்மா படேகனூருக்கும், மராட்டியத்தை சேர்ந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த பிரமுகரின் மனைவிக்கும், ரேஷ்மா படேகனூருக்கும் இடையே தகராறு நடந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்களுக்குள் நடந்த தகராறு சம்பந்தமாக மராட்டிய மாநிலம் கோலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதுதவிர, நேற்று முன்தினம் அந்த பிரமுகருடன் ரேஷ்மா படேகனூர் வெளியே சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொல்ஹார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜயாப்புரா மாவட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவியாக இருந்த ரேஷ்மா படேகனூர் கடந்த 2013-ம் ஆண்டு விஜயாப்புரா மாவட்டம் தேவரஹிப்பரகி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த ஆண்டு (2019) நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Next Story