பேரையூர், சோழவந்தான், மேலூரில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் விழுந்தன, வீட்டின் மேற்கூரை இடிந்து டெய்லர் பலி


பேரையூர், சோழவந்தான், மேலூரில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் விழுந்தன, வீட்டின் மேற்கூரை இடிந்து டெய்லர் பலி
x
தினத்தந்தி 17 May 2019 10:26 PM GMT (Updated: 17 May 2019 10:26 PM GMT)

பேரையூர், சோழவந்தான், மேலூரில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் சாய்ந்து விழுந்தன. டி.கல்லுப்பட்டி அருகே வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் டெய்லர் ஒருவர் பலியானார்.

பேரையூர்,

மதுரை மாவட்டத்தில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை முதலே வெயில் கொளுத்தி வந்த நிலையில் மதியம் வெயில் தீவிரமானது. அதன்பிறகு மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இடி-மின்னலுடன் மழை பெய்தது.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பேரையூர், எம்.சுப்புலாபுரம், கோபிநாயக்கன்பட்டி, சிலார்பட்டி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் எம்.சுப்புலாபுரம் பகுதிகளில் இருந்த 6 பெரிய மரங்கள் முறிந்து விழுந்தன.

மேலும் திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் உள்ள ஒரு புளிய மரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எம்.சுப்புலாபுரத்தில் பலத்த காற்றுக்கு மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின் தடை ஏற்பட்டது. இதேபோல் கோபிநாயக்கன்பட்டியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது ராஜசேகர் (வயது 53) என்ற டெய்லர் வீட்டின் கைப்பிடிச்சுவர் சாய்ந்து மேற்கூரை உடைந்து விழுந்தது. இதில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த ராஜசேகர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார்.

இந்த சம்பவம் குறித்து கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த ராஜசேகருக்கு வனசுந்தரி என்ற மனைவியும், விக்னேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

இதே போல் சோழவந்தான் பகுதியில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழைகள் ஒடிந்து விழுந்தன. சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் சங்கையாகோவில் அருகே இருந்த ஒரு தென்னை மரம் வேரோடு சாய்ந்து உயர் அழுத்த மின் கம்பியின் மீது விழுந்தது. இதில் மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. நீண்ட நேரம் மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதி அடைந்தனர்.

இதே போல் மேலூரிலும் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Related Tags :
Next Story