உடுமலையில் போலீசாரை கண்டித்து கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உடுமலையில் போலீசாரை கண்டித்து கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 May 2019 10:00 PM GMT (Updated: 20 May 2019 7:48 PM GMT)

உடுமலையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் பகுதியில் சில்லரை மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 13-ந்தேதி இரவு சீருடை அணியாத போலீசார் விசாரணைக்காக அங்குள்ள சமுதாய நலகூடம் பகுதிக்கு சென்றதாகவும்,அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்( வயது 30) என்பவர் நீங்கள் யார்? சீருடை அணியாமல் யாரும் வந்து விசாரிக்க கூடாது என்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், மிரட்டியதாகவும் செல்வராஜ் மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செல்வராஜ் உடுமலையை அடுத்துள்ள ஜிலோபிநாயக்கன்பட்டியில் வருவாய்த்துறையின் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கிராம உதவியாளர் செல்வராஜ் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும் அதைக்கண்டித்தும்,அந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க உடுமலை கிளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர்.

இதை தொடர்ந்து உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ள பாபுகான் வீதியின் இருபுறமும் சாலையின் நுழைவுப்பகுதியில் தடுப்பு அமைத்திருந்தனர். கச்சேரி வீதி- பாபுகான் வீதி சந்திப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து கிராம உதவியாளர் செல்வராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து கச்சேரிவீதியில் உள்ள உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கு சங்க மாநிலத்தலைவர் ராஜசேகர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உடுமலை வட்டக்கிளை நிர்வாகிகள் அம்சராஜ்,பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க உடுமலை வட்டக்கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story