வீட்டு செலவுக்கு பணம் கேட்டு மனைவி திட்டியதால் விஷம் தின்று தொழிலாளி தற்கொலை


வீட்டு செலவுக்கு பணம் கேட்டு மனைவி திட்டியதால் விஷம் தின்று தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 22 May 2019 10:15 PM GMT (Updated: 22 May 2019 7:54 PM GMT)

மயிலாடுதுறை அருகே வீட்டு செலவுக்கு பணம் கேட்டு மனைவி திட்டியதால் தொழிலாளி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஆட்டூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 45). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயபாரதி (35). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுந்தரமூர்த்தி, நன்னிலம் தாலுகா கீரனூரில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த ஊரில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சுந்தரமூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டு பேரளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்ததால் ஒரு மாத காலமாக நன்னிலம் கோர்ட்டில் தினமும் சுந்தரமூர்த்தி கையெழுத்து போட்டு வந்தார். இதனால் அவர், ஒரு மாதமாக வேலைக்கு செல்லவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் வீட்டு செலவுக்கு பணம் கேட்டு ஜெயபாரதி, தனது கணவர் சுந்தரமூர்த்தியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி கடந்த 19-ந் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுந்தரமூர்த்தி சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story