வேறு கட்சியில் இணைய திட்டமா? கட்சி பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேட்டி


வேறு கட்சியில் இணைய திட்டமா? கட்சி பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 7:59 PM GMT)

வேறு கட்சியில் இணைய திட்டமா? என்பது குறித்து கட்சி பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு என்.டி. வெங்கடாசலம் கட்சியின் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளராக இருந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென கடிதம் கொடுத்தார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் இவருடைய முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வேறு கட்சியில் இணைகிறார் என்பது போன்ற தகவல்கள் பரவின. இந்தநிலையில், நேற்று பெருந்துறையில் தோப்புவெங்கடாசலம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் தனிப்பட்ட காரணங்களால் தான் கட்சி பதவியில் இருந்து விலகினேன். தேர்தல் முடிவுக்கு பின்னர் நான் வேறு கட்சியில் இணைவதாக பல்வேறு செய்திகள் வருகின்றன. இது முற்றிலும் தவறானது.

எனது தொகுதியில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டரால் அனுமதியும் கொடுக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை மாவட்ட வருவாய் அதிகாரி ரத்து செய்கிறார் என்றால் என்ன காரணம்? இந்த திட்டத்தை மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ளவர் ஒருவர்தான் கிடப்பில் போட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என தகவல் வந்தது. அது யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள் ளேன்.

தொகுதி மக்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதால் தான் எனது கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தேன். நான் எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை விட்டு வேறு கட்சிகளுக்கு செல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story