ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி கைது


ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி கைது
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 9:25 PM GMT)

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் வடமாநில சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக போலீசாரால் தேடப்பட்ட காவலாளி கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை வார்டில் ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் 1½ வயது குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இந்த குழந்தையின் தாயாருக்கு உதவியாக வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும், அவருடைய மகளான 10 வயது சிறுமியும் வந்திருந்தனர்.

இரவு நேரத்தில் இவர்கள் அனைவரும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப்பிரிவு வார்டின் முன் பகுதியில் உள்ள வராண்டாவில் தூங்கினர். அப்போது ஆஸ்பத்திரியில் காவலாளியாக இருந்த நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியைச் சேர்ந்த சுபின் என்பவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சிறுமி சத்தம் போட்டு அழுதார். உடனே குழந்தையின் தாயாரும் அங்கு படுத்திருந்தவர்களும் திரண்டு காவலாளியை அடித்து விரட்டினர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் நேற்று முன்தினம் காலையில் ஆஸ்பத்திரியில் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து காவலாளி பணியாற்றிய ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர், சுபினை பணிநீக்கம் செய்தார். இருப்பினும் அவர் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவுறுத்தியது. மேலும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சுபின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுபின் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story