கும்பகோணம் அருகே நாய்க்குட்டிகளை கொடூரமாக தாக்கி கொன்ற 2 பேர் மீது போலீசில் புகார்


கும்பகோணம் அருகே நாய்க்குட்டிகளை கொடூரமாக தாக்கி கொன்ற 2 பேர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 25 May 2019 10:00 PM GMT (Updated: 25 May 2019 8:33 PM GMT)

கும்பகோணம் அருகே நாய்க்குட்டிகளை கொடூரமாக தாக்கி கொன்ற 2 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோட்டை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது52). இவர் தெரு நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வந்தார். அந்த நாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள வணிக வளாகத்தில் 5 குட்டிகளை ஈன்றது. அதில் 2 குட்டிகளை வளர்ப்பதற்காக கணேசமூர்த்தி தனது நண்பர்களிடம் கொடுத்துவிட்டார். மீதி இருந்த 3 குட்டிகள் தனது தாயுடன் வணிக வளாகத்தின் அருகே வளர்ந்து வந்தது. இந்த நிலையில் கணேசமூர்த்தி நாய்க்கு உணவு கொடுக்க வணிக வளாகத்துக்குள் சென்றார். அப்போது அங்கு கடை வைத்திருந்த ராமநாதன், ராம்குமார் ஆகிய 2 பேர் நாய்க்குட்டிகளை கட்டையால் கொடூரமாக தாக்கினர். இதனால் நாய்க்குட்டிகள் அலறிதுடித்தன.

வழக்குப்பதிவு

இதைக்கண்டு ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி நாய்க்குட்டிகளை தாக்கிய ராமநாதன், ராம்குமார் ஆகிய 2 பேரிடமும் ஏன் நாய்க்குட்டிகளை தாக்குகிறீர்கள்? என கேட்டார். அப்போது ராமநாதனும், ராம்குமாரும் தகாத வார்த்தைகளால் கணேச மூர்த்தியை திட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தலையில் பலத்த காயமடைந்த 2 நாய்க்குட்டிகளும் வலி தாங்க முடியாமல் உயிரிழந்தன. இதனால் வேதனை அடைந்த கணேசமூர்த்தி இறந்த நாய் குட்டிகளை கும்பகோணம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.

அங்கு பணியில் இருந்த கால்நடை டாக்டரிடம் நாய்க்குட்டிகளின் இறப்புக்கான காரணத்தை அறிக்கையாக வாங்கி கொண்டார். பின்னர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்ற கணேச மூர்த்தி அங்கு ராம்குமார் மற்றும் ராமநாதன் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதன் மற்றும் ராம்குமார் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story