கொரடாச்சேரி ஒன்றியத்தில் கடும் வெப்பத்தால் வறண்டு வரும் குளங்கள் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம்


கொரடாச்சேரி ஒன்றியத்தில் கடும் வெப்பத்தால் வறண்டு வரும் குளங்கள் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 26 May 2019 10:45 PM GMT (Updated: 26 May 2019 6:48 PM GMT)

கொரடாச்சேரி ஒன்றியத்தில் கடும் வெப்பத்தால் குளங்கள் வறண்டு வருவதால் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் நீரை சேமித்து தேவைக்கேற்ப பயன்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தி கோடையிலும் ஆழ்குழாயில் தண்ணீர் கிடைக்கும் வகையிலும் கிராமங்கள் தோறும் குளம், குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குளங்களில் உள்ள நீர் கோடை காலத்தில் மக்களுக்கு பயன்பட்டு வந்தது.

கோடையில் குளம், குட்டைகளில் தண்ணீர் குறைந்தாலும் ஜூன் மாதம் வரை குறைந்த அளவு தண்ணீராவது இருக்கும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு பாதுகாக்கப்படும். அதன்மூலம் மோட்டார் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். கால்நடைகள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் இந்த தண்ணீர் பயன்படும்.

தற்போது கடும் வெப்பத்தால் குளம், குட்டைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. சில இடங்களில் குளம், குட்டைகள் வறண்டு வருகின்றன.

நீர்மட்டம்

குளம், குட்டைகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறைந்துவிட்டால் அதில் உள்ள மீன்கள் இறந்துவிடும். இதனை கருத்தில் கொண்டு தற்போது முன்கூட்டியே குளம், குட்டைகளில் தண்ணீரை இறைத்துவிட்டு மீன்பிடிக்க தொடங்கிவிட்டனர். இதனால் அப்பகுதியில் நீர்மட்டம் குறைந்துவிட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற நிலை கொரடாச்சேரி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பம்புசெட்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்மட்டம் குறைந்த நிலையில் பம்புசெட்களை இயக்கினால் மோட்டார் பழுதாகிவிடும். எனவே பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி செய்பவர்களும் மோட்டார் பம்புசெட்டுனை இயக்காமல் நிறுத்தியுள்ளனர். குளம், குட்டைகள் வறண்டு வருவதால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

இந்த நிலை தொடர்ந்தால் குறுவை சாகுபடிக்கு மட்டுமின்றி குடிநீர் பயன்பாட்டிற்குரிய வீடுகளில் உள்ள மோட்டார்களுக்கும் தண்ணீர் மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்துவிடும். கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்காமல் போய்விடும்.

எனவே மேட்டூர் அணை திறக்கும்வரை குளம், குட்டைகளில் தண்ணீர் இறைத்து மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story