மணிகண்டம் அருகே பள்ளப்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 25 பேர் காயம்


மணிகண்டம் அருகே பள்ளப்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 25 பேர் காயம்
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 7:42 PM GMT)

மணிகண்டம் அருகே பள்ளப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயம் அடைந்தனர்.

மணிகண்டம்,

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே அளுந்தூர் ஊராட்சி பள்ளப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அங்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, லால்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விராலிமலை, இலுப்பூர், மணப்பாறை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன. கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து 679 காளைகளுக்கு அனுமதி வழங்கினர். இதேபோல மாடுபிடி வீரர்களை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து தகுதியான 285 மாடுபிடி வீரர்களை ஜல்லிக் கட்டில் பங்கேற்க அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி அறம் மக்கள் நலச்சங்கம் நிறுவன தலைவர் டாக்டர் ராஜா கொடியசைத்து தொடங்கிவைத்தார். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, ஸ்ரீரங்கம் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், தாசில்தார் கனகமாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். சில காளைகள் தன்னை பிடிக்க வந்தவர்களை முட்டி தூக்கி வீசின.

அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்னக்கொம்பன், வெள்ளைக்கொம்பன் ஆகிய இரு காளைகளும் வீரர்களை நெருங்க விடாமல் திடலில் சுற்றிச்சுற்றி வந்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் என்று 25 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் படுகாயமடைந்த மணிகண்டம் அருகே உள்ள பூங்குடி சக்திவேல் (வயது 40), மஞ்சநாயக்கன்பட்டி விஜய்(21), விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள பிடாரம்பட்டி முருகேசன் (21), சோமரசம்பேட்டை சரண் (22) ஆகிய 4 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசு, வெள்ளிக்காசு, சைக்கிள், நாற்காலி, மிக்ஸி, பாத்திரங்கள், மின்விசிறி, ரொக்கப்பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. மணிகண்டம், நாகமங்கலம், திருச்சி, விராலிமலை, புதுக்கோட்டை, அலங்காநல்லூர், இனாம்குளத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.

இதையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டாங்ரே தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் பேராசிரியர் சண்முகம், துணைத்தலைவர் பி.கே.பழனிச்சாமி, அளுந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பழனிச்சாமி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். 

Next Story