சென்னை விமான நிலையத்தில் மருந்து பொருட்களை திருடி போதை கும்பலுக்கு விற்ற ஊழியர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கினர்


சென்னை விமான நிலையத்தில் மருந்து பொருட்களை திருடி போதை கும்பலுக்கு விற்ற ஊழியர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கினர்
x
தினத்தந்தி 26 May 2019 11:15 PM GMT (Updated: 26 May 2019 7:48 PM GMT)

சென்னை விமான நிலைய சரக்ககப்பிரிவில் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டு வரப்பட்ட மருந்து பொருட்களை திருடி, போதை கும்பலுக்கு விற்ற முன்னாள் ஊழியர்கள் 4 பேரை, 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனி நிர்வாகி ஒருவரின் வீட்டில் 4 பேர் மருந்து பேரல்கள் கேட்டு ரகளை செய்வதாக வந்த தகவலின்பேரில் திருவான்மியூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

விசாரணையில் ரகளையில் ஈடுபட்ட 4 பேரும் சென்னை விமான நிலைய சரக்ககப்பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருவதாக கூறியதால் 4 பேரும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மீனம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் நடேசன், விமான நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பிடிபட்ட 4 பேரிடமும் தீவிரமாக விசாரித்தனர்.

அதில் அவர்கள், ஆலந்தூரை சேர்ந்த தினேஷ் (வயது 29), ரவி என்ற தோல் ரவி(54), அன்சன்(51) மற்றும் நங்கநல்லூரை சேர்ந்த குமரன்(42) என்பதும், இவர்கள் சென்னை விமான நிலைய சரக்ககப்பிரிவில் ஏற்கனவே வேலை செய்து நின்றுவிட்டதும் தெரிந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய 48 பேரல்களில் சளி, மூக்கடைப்புக்கான மருந்து பொருட்கள் விமான நிலைய சரக்ககப்பிரிவில் வைக்கப்பட்டு இருந்தது.

அதில் 50 கிலோ எடைகொண்ட 2 பேரல்களில் இருந்த மருந்து பொருட்களை இவர்கள் 4 பேரும் திருடி, ஒரு கும்பலுக்கு விற்று நல்ல பணம் சம்பாதித்து உள்ளனர். இந்த மருந்து பொருட்களை சற்று அதிகமாக சாப்பிட்டால் போதையாக மாறும் என்று கூறப்படுகிறது. இவர்களிடம் இருந்து மருந்து பொருட்களை பணம் கொடுத்து வாங்கிய கும்பல் அதை போதை பொருட்களாக மாற்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

அதன்பிறகு சரக்ககப்பிரிவில் வேலையில் இருந்து நின்றுவிட்ட இவர்கள், மீண்டும் அதேபோன்று மருந்து பொருட்களை வாங்கி போதை கும்பலுக்கு விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் திருவான்மியூர் பகுதியை சேர்ந்த பழனி, வசந்த் ஆகியோரிடம் ரூ.8 லட்சம் கொடுத்து மருந்து பொருட்களை தரும்படி கேட்டனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும், சொன்னபடி மருந்து பொருட்களை கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்தனர். இதுபற்றி இவர்கள் கேட்டபோது, தான் அந்த மருந்து நிறுவன நிர்வாகியிடம் பணம் கொடுத்து விட்டதாகவும், இனி நீங்களே அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

அதன்படியே இவர்கள் 4 பேரும் திருவான்மியூரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவன நிர்வாகி வீட்டில் ரகளையில் ஈடுபட்டதும், பின்னர் போலீசாரிடம் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

விமான நிலைய சரக்ககப்பிரிவில் மருந்து பொருட்கள் திருடப்பட்டது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருந்து நிறுவன துணைத்தலைவர் பிரபாகரன் என்பவர் அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து பிடிபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் இவர்களிடம் இருந்து மருந்து பொருட்களை வாங்கி, அதை போதை பொருட்களாக மாற்றி விற்ற கும்பல் யார்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story