மாத்தூர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு


மாத்தூர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 May 2019 10:30 PM GMT (Updated: 26 May 2019 8:24 PM GMT)

மாத்தூர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே மாத்தூரில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா, கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை கீரனூர் மறைவட்ட அதிபர் மற்றும் பங்குதந்தையான அருளானந்தம் கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்.

அதைத்தொடர்ந்து 23-ந் தேதி மாலை ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ், 24-ந் தேதி மாலை மலம்பட்டி பங்குத்தந்தை ரட்சகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திருவிழா திருப்பலி நிறைவேற்றினர்.

நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அருட்தந்தையர்கள் சின்னப்பன், நாயகசீலன், பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிை-வேற்றினர். இதைத்தொடர்ந்து அன்று இரவு 8 மணியளவில் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசியார் மற்றும் மாதா, சம்மனசு ஆகிய தேர்பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு அருட்தந்தை சகாய ஜெயக்குமார் கலந்து கொண்டு திருவிழா மற்றும் புதுநன்மை விழா திருப்பலி நிறைவேற்றினார். திருவிழாவில் மாத்தூர், அய்யம்பட்டி, ராசிபுரம், குண்டூர், பர்மாகாலனி, அயன்புத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாத்தூர் பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் அருட்சகோதரிகள் பங்குபேரவையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். 

Next Story