தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாக கொளுத்தும் வெயில்


தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாக கொளுத்தும் வெயில்
x
தினத்தந்தி 28 May 2019 10:45 PM GMT (Updated: 28 May 2019 7:07 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகாவது குறையுமா? என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதுவும் கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கி இன்று(புதன்கிழமை) நிறைவடைகிறது. தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் நேற்று வரை தொடர்ந்து 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது.

அக்னி நட்சத்திர கால கட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த வெயில் கொடுமையால் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இவ்வாறு செல்பவர்களும் குடைகளை பிடித்துக்கொண்டும், முகத்தில் துணியை மூடிக்கொண்டும் சென்று வருகிறார்கள்.

பகல் நேரத்தில்தான் இவ்வாறு என்றால், இரவிலும் வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே உள்ளது. இரவு நேரத்தில் மின் விசிறியில் இருந்து வரும் காற்று அனல்காற்றாகவே வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கஜா புயலுக்கு பின்னர் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால் வெப்பத்தின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த வெப்பத்துக்கு மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன. ஆடு, மாடுகள் சாலையோரத்தில் உள்ள மரங்களின் நிழல் அல்லது பெரிய கட்டிடங்களின் நிழலில் தஞ்சம் அடைவதை காண முடிகின்றது.

தஞ்சையில் நேற்று கொளுத்திய வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தஞ்சை பாலாஜி நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற 2 குதிரைகள் சோர்வடைந்து சாலையோரத்தில் உள்ள செல்போன்கள் விற்பனை செய்யும் கடை முன்பு சென்று நின்று கொண்டது. அந்த கடையில் ஏ.சி. பொருத்தப்பட்டு இருந்ததால், அந்த கடையின் கதவை திறக்கும்போது அதில் இருந்து குளிர்ந்த காற்று வந்ததால் அதற்காகவே கடை முன்பு தஞ்சம் அடைந்தன.

3 மணி நேரத்திற்கும் மேலாக அந்த குதிரைகள் கடையின் முன்பு நின்று கொண்டே இருந்தன. ஆனால் யாருக்கும் எந்தவித பாதிப்பையும் அந்த குதிரைகள் ஏற்படுத்தவில்லை. குதிரைகள் கடையின் வாசலில் நின்றதை பார்த்து கடையில் உள்ளவர்கள், வெயில் காரணமாக அவைகள் நிற்கின்றன, அவைகளை விரட்ட வேண்டாம் என கருதி அப்படியே விட்டு விட்டனர். அந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும், குதிரைகளுக்காக ஒதுங்கி சென்றனர்.

கடுமையான வெப்பத்தை மனிதர்களாலேயே தாங்க முடியாத நிலையில் விலங்குகள் மட்டும் என்ன செய்யும். குதிரைகள் குளிர்காற்றை அனுபவித்து வெப்பத்தை போக்கிக்கொள்ளட்டும் என பொதுமக்கள் கூறியபடியே அங்கிருந்து சென்றனர்.

அக்னி நடசத்திரம் இன்றுடன்(புதன்கிழமை) முடிவடைவதால் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகாவது வெயிலின் தாக்கம் குறையுமா? என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story