வெடித்த மின்மாற்றியை சரி செய்யாததால் வெங்கடேசபுரம் பகுதி மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


வெடித்த மின்மாற்றியை சரி செய்யாததால் வெங்கடேசபுரம் பகுதி மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2019 11:00 PM GMT (Updated: 30 May 2019 7:36 PM GMT)

வெடித்த மின்மாற்றியை சரி செய்யாததால் வெங்கடேசபுரம் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் முடிந்தும் இன்னும் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் பலர் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால்பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவ்வாறு இருக்கையில் பெரம்பலூர் வெங்கேடசபுரம் விரிவாக்கப்பகுதியில் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்தப்பகுதியை சுற்றி மின்சாரம் தடைபட்டது. இதனை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக தெரிவிக்க பெரம்பலூர் மின்வாரிய அலுவலக தொலைபேசியை தொடர்பு கொண்டனர். ஆனால் அலுவலகத்தில் தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை. இதனால் மின்சாரம் இப்பவந்து விடும், பிறகு வந்து விடும் என்று அந்தப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இதனால் இரவில் முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இரவில் தூங்க முடியாமல் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். இந்த மின்சாரம் தடையால் சிலர் காற்றோட்டத்திற்காக இரவில் தெருக்களில் நடமாடியதைகாணமுடிந்தது.

கடும் சிரமத்துக்கு ஆளாகினர்

ஆனால் விடிந்த பிறகும் வெகு நேரமாகியும் மின்சாரம் வழங்கவில்லை. இதனால் காலையில் வீட்டில் மின்மோட்டாரை இயக்க முடியாமலும், இல்லத்தரசிகள் சமையல் செய்ய முடியாமலும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று மதியம் மின்மாற்றியை சரி செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் வந்தனர். ஆனால் சரி செய்ய முடியாததால், அந்த மின்மாற்றியை கழற்றி அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் அதற்கு பதிலாக புதிய மின்மாற்றியை பொருத்தும் பணியில் ஈடுபடுவதாக கூறினர். ஆனால் மாலை வரை அந்த பணி நடைபெறவில்லை. இதற்கிடையே அந்தப்பகுதி பொதுமக்கள் இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு மின்சாரம் எப்போது வரும் என கேட்டனர். அதற்கு அதிகாரி ஒருவர் மின்மாற்றியை மாற்றவுள்ளதால், ஒரு மணி நேரத்தில் மின்சாரம் வினியோகிக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு தடைப்பட்ட மின்சாரம் மாலை 4 மணி வரை வரவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசபுரம் பகுதி பொதுமக்கள் பெரம்பலூர்- திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் நகர மின்வாரிய அதிகாரிகளும், பெரம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சரி செய்யும் பணி முடிந்ததும், மின்சாரம் வினியோகிக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தினை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். அதனை தொடர்ந்து இரவு 7.25 மணிக்கு வந்த மின்சாரம் 7.30 மணிக்கு மீண்டும் மின்சாரம் தடைபட்டது. பின்னர் மின்சாரம் திடீர், திடீரென வந்து சென்ற வண்ணம் இருந்தது. இதனால் வெங்கடேசபுரம் விரிவாக்க பகுதி பொதுமக்கள் மின்சாரம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். 

Next Story