குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதி: கள்ளப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதி: கள்ளப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Jun 2019 10:45 PM GMT (Updated: 3 Jun 2019 8:28 PM GMT)

குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்கு உள்ளான பொதுமக்கள், குடிநீர் கேட்டு கள்ளப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

லாலாபேட்டை,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கள்ளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பள்ளி, கருப்பத்தூர், கொடிக்கால் தெரு, ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் பெறப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து மக்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக காவிரி ஆற்றில் கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடப்பதால் கள்ளப்பள்ளி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டினால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் குடிநீர் பிடித்து வருவதற்காக பல்வேறு இடங்களுக்கு சைக்கிள், மொபட் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் அலைந்து திரிவதை காண முடிகிறது.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை கள்ளப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அந்த அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்தனர். அப்போது, குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து தினமும் எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் பழுதடைந்த ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டிகளை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பொன்துறை சிவா மற்றும் கள்ளப்பள்ளி ஊராட்சி மன்ற செயலாளர் லட்சுமணன் ஆகியோர் அங்கு வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 3 மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story