திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு


திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2019 11:15 PM GMT (Updated: 4 Jun 2019 7:05 PM GMT)

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் 2 மணி நேரம் விமானத்திலேயே தவித்தனர்.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர், கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு தினந்தோறும் ஸ்கூட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி விமானம் நிலையம் வந்துவிட்டு, மீண்டும் திருச்சியில் இருந்து 1.30 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்லும். நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 113 பயணிகள் ஏறி அமர்ந்து விட்ட நிலையில் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது, விமானத்தில் இறக்கை பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையறிந்த 113 பயணிகளும் விமானத்தில் தவித்தனர். பயணிகளை விமானத்தைவிட்டு இறக்காமலேயே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியை தொழில் நுட்ப வல்லுனர்கள் தொடங்கினர். 2 மணி நேரத்தில் பழுது சரி செய்யப்பட்டது. இதனால் நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக 3.30 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானம் வானத்தில் பறக்கும் முன்பே தொழில்நுட்ப கோளாறு விமானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த வாரம் சிங்கப்பூர் புறப்பட்ட இதேபோன்ற ஸ்கூட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதை சரிசெய்த பின்னரே விமானம் தாமதமாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. ஸ்கூட் விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருவது அதிகாரிகள், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story