விநாயகர் கோவில் கட்டுவது தொடர்பாக பிரச்சினை: இரு சமூகத்தினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை


விநாயகர் கோவில் கட்டுவது தொடர்பாக பிரச்சினை: இரு சமூகத்தினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 13 Jun 2019 10:00 PM GMT (Updated: 13 Jun 2019 7:25 PM GMT)

தஞ்சையில் விநாயகர் கோவில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் இரு சமூகத்தினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை நிர்மலாநகரில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்போர்களுக்காக பொது இடம் உள்ளது. இந்த இடத்தின் ஒரு பகுதியில் கற்கப விநாயகர் கோவில் கட்ட குடியிருப்போர் சங்கத்தினர் முடிவு செய்து அதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கியபோது ஒரு சமூகத்தினர், விநாயகர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறி கட்டிட பணியை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதை அறிந்த அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு சமூகத்தினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைதி பேச்சுவார்த்தை

பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எடுக்கலாம் என போலீசாரும், அதிகாரிகளும் கருத்து தெரிவித்தனர். அதன்படி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றுகாலை அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தாசில்தார் அருணகிரி, உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது இரு சமூகத்தினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் தங்களிடம் உள்ள ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

யாருக்கு சொந்தமானது

இதைத்தொடர்ந்து இரு சமூகத்தினரும் நிர்மலாநகரில் உள்ள பொது இடம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை நாளை(சனிக்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை சரிபார்த்து அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து வருகிற 18-ந் தேதி முறைப்படி அறிவிக்கப்படும். அதுவரை எந்த பிரச்சினையும் இன்றி அமைதியாக இருக்க வேண்டும். கட்டிட பணிகளை மேற்கொள்ளக்கூடாது என வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தெரிவித்தார்.

பின்னர் அமைதிபேச்சுவார்த்தை எந்த பிரச்சினையும் இன்றி நிறைவடைந்து, இரு சமூகத்தினரும் கலைந்து சென்றனர்.

Next Story