ஆம்புலன்ஸ் சேவையில் 2.70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் கலெக்டர் ஷில்பா தகவல்


ஆம்புலன்ஸ் சேவையில் 2.70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்  கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2019 9:30 PM GMT (Updated: 14 Jun 2019 1:34 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆம்புலன்ஸ் இலவச சேவையில் 2.70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆம்புலன்ஸ் இலவச சேவையில் 2.70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஆம்புலன்ஸ் சேவை 

தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை கடந்த 10 ஆண்டுகளாக நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 690 பேர் பயன்பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் 31 ஆம்புலன்ஸ் வேன்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு மக்களுக்கு துரித சேவை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இன்குபெட்டர் வசதிகளுடன் கூடிய 2 ஆம்புலன்ஸ் வாகனமும் உள்ளது. மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் வசதி மற்றும் வென்டிலேட்டர் வசதியுடன் 3 ஆம்புலன்ஸ் வேன்கள் உள்ளது. மீதி உள்ள 26 ஆம்புலன்ஸ் வேன்கள் அனைத்து அவசரகால மருத்துவர்கள் மற்றும் உபகரணங்களுடன் செயல்பட்டு வருகிறது.

அவசர கால உதவியில்... 

கடந்த ஏப்ரல் மாதம் வரை வாகன விபத்தில் சிக்கிய 60 ஆயிரத்து 7 பேரும், கர்ப்பிணிகள் 62 ஆயிரத்து 243 பேரும், அவசர மருத்துவ உதவியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 440 பேரும் பயனடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆம்புலன்ஸ் சேவை வசதியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story