மாயாகுளம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை: கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு


மாயாகுளம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை: கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 11:00 PM GMT (Updated: 14 Jun 2019 7:01 PM GMT)

மாயாகுளம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்,

திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் 13 கிராமங்கள் உள்ளன. இதில் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மாயாகுளத்தில் வசிப்பவர்களுக்கு நைனார் அப்பா தர்கா அருகில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணறுகளில் இருந்து தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போதுமான அளவில் தண்ணீர் வருவது இல்லை.

மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்கு காரணம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான 4 கிணறுகளில் இருந்து தினமும் 13 லாரிகள் உட்பட டிராக்டர், சரக்கு வாகனம் போன்ற சுமார் 30 வண்டிகளில் இரவும் பகலும் தண்ணீர் எடுத்து கட்டிட வேலை, ஐஸ்கம்பெனி, இறால் பண்ணை போன்றவற்றுக்கு விற்பனை செய்வது தான் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக நிலத்தடிநீர் மட்டம் குறைந்து ஊராட்சி கிணறுகளில் நீர் வறண்டு மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. குடிப்பதற்கு ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்கும் அவல நிலை உள்ளது. எனவே தனியார் இடங்களில் பணத்திற்காக தண்ணீரை விற்பதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என கிராம மக்கள் சார்பில் அற்புதக்குமார் என்பவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

Next Story