திருமங்கலத்தில் வாகனங்களை மறித்து பணம் வசூலித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது


திருமங்கலத்தில் வாகனங்களை மறித்து பணம் வசூலித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 8:30 PM GMT)

திருமங்கலத்தில் சப்–இன்ஸ்பெக்டர் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தவர் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வழக்கம் போல் நேற்று ஆட்டுச்சந்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்தநிலையில் சந்தைப்பேட்டை உசிலம்பட்டி ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அருகே போலீஸ் உடையுடன் நின்றிருந்த நபர், வாகன சோதனை செய்து கொண்டு இருந்தார். அவர் சந்தைக்கு ஆடுகள் ஏற்றி வந்த சரக்கு வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர் வாகன ஓட்டிகளிடம் போதிய ஆவணம் இல்லை எனக்கூறி பணம் வசூலித்துள்ளார்.

இதற்கிடையே திருமங்கலம் டவுன் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, போலீஸ் உடையில் நின்றிருந்தவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர் தன்னை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் என்று கூறியுள்ளார். மேற்கொண்டு விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததார். அப்போது தான் அவர் போலி சப்–இன்ஸ்பெக்டர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் எருமலைபட்டி கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 41) என்பது தெரியவந்தது.

அவர் இதுபோன்று மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலி சப்–இன்ஸ்பெக்டராக நடித்து வசூல் வேட்டை நடத்தியதும் தெரியவந்தது. இதயைடுத்து ராமனை போலீசார் கைது செய்தனர். போலீஸ் உடை அணிந்து சப்–இன்ஸ்பெக்டர் எனக்கூறி பணம் வசூலித்தவர் கைதானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story