மாமூல் கொடுக்காவிட்டால் சாராயம் விற்க கூடாது: வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோவால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


மாமூல் கொடுக்காவிட்டால் சாராயம் விற்க கூடாது: வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோவால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 9:01 PM GMT)

மாமூல் கொடுக்காவிட்டால் சாராயம் விற்க கூடாது என்று வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோவால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கொள்ளிடம், 

நாகை மாவட்டம் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சேகர் பணியாற்றி வந்தார். இவர் கொள்ளிடம் பகுதியில் சாராயம் விற்று வரும் ஒருவரிடம் மாமூல் கேட்டு மிரட்டி பேசிய ஆடியோ பதிவு வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

அதில் செல்போனில் பேசிய அந்த நபர், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரிடம். ‘நான் சொல்லியும் நீங்க அவரை விட்டுட்டு போகலையே பாவம் சார்’ என்று கூறுகிறார்.

அதற்கு பதில் அளித்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், அவன் மறுநாளோ, 3-ம் நாளோ போலீஸ் நிலையத்திற்கு வந்திருக்கிறான். அப்பக்கூட அவன் என்னை பார்க்கவில்லை. என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவும் இல்லை. அதன் பின்னர் போன மாதமும் காசு கொடுக்கவில்லை. அதற்கு முதல் மாதமும் காசு கொடுக்கவில்லை. அவன் இப்ப 2 மாதத்திற்கு காசு கொடுக்க வேண்டும். மாதம் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் தேவையில்லை. முன்பு போலீசார் 15 பேர் தான் இருந்தோம். இப்போது 25 பேர் இருக்கிறோம். மாதம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம், போலீசுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கிற மாதிரி இருந்தா சாராயம் விற்கட்டும். இல்லையென்றால் அவன் விற்க கூடாது என்று கூறுகிறார்.

இவ்வாறு தொடர்ந்து மாமூல் பெற்று வரும் போலீஸ் குறித்த இந்த ஆடியோ பதிவு வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று கொள்ளிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகரை பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Story