தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது நாசர், பூச்சி முருகன் கூட்டாக பேட்டி


தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது நாசர், பூச்சி முருகன் கூட்டாக பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 7:55 PM GMT)

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என புதுக்கோட்டையில் நடிகர்கள் நாசர், பூச்சி முருகன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

புதுக்கோட்டை,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கக்கோரி பாண்டவர் அணியை சேர்ந்த திரைப்பட நடிகர்கள் நாசர், பூச்சி முருகன், பசுபதி, நந்தா உள்ளிட்டோர் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் சங்கரதாஸ் சுவாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து முத்தமிழ் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களிடம் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டினர்.

பின்னர் நடிகர்கள் நாசர், பூச்சி முருகன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நடிகர் சங்க தேர்தலுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க மறுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு சட்டப்படி நீதிமன்றத்திற்கு சென்று தீர்வு காண்போம். நடிகர் சங்க கட்டிடத்தை தனிப்பட்ட நபர்கள் யாரும் கட்ட முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து தான் கட்ட முடியும். தனிப்பட்ட நபர்கள் யாரும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது.

நாங்கள் ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரி உள்ளநிலையில் விரைவில் நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்து ஆதரவு கோர உள்ளோம். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாடக நடிகர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

நாங்கள் கொடுத்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மேலும் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து நடிகர் கருணாஸ் கூறுகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட காரணம் ஐசரி கணேஷ் தான். சங்க உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க முயற்சி செய்து வருகிறார். சங்கரதாஸ் அணியின் பின்புலத்தில் ராதாரவி உள்ளார். 23-ந் தேதி திட்டமிட்டபடி நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்றார்.

புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தை பொருத்தவரை 103 வாக்குகள் உள்ளது. இதில் இறந்தவர்கள் போக தற்போது 98 வாக்காளர்கள் உள்ளனர். இதில் சிலர் சங்கத்தில் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, நேற்று பாண்டவர் அணியினர் ஆதரவு கேட்டு வந்தபோது, சங்க நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு இல்லாததால் சிலர் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

Next Story