மதுரையில் லத்தி வீச்சில் வாலிபர் பலி, போலீஸ்காரர் பணியிடை நீக்கம் - உடலை வாங்காமல் 5-வது நாளாக உறவினர்கள் போராட்டம்


மதுரையில் லத்தி வீச்சில் வாலிபர் பலி, போலீஸ்காரர் பணியிடை நீக்கம் - உடலை வாங்காமல் 5-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 12:14 AM GMT)

போலீசாரின் லத்தி வீச்சுக்கு வாலிபர் பலியான விவகாரத்தில் அவரது உடலை வாங்காமல் 5-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீஸ்காரர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை, 

மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் விவேகானந்தகுமார்(வயது 35). அவருடைய மனைவி கஜப்பிரியா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. விவேகானந்தகுமார், சிம்மக்கல் பகுதியில் டயர் கடை வைத்திருந்தார். இவர் கடந்த 15-ந் தேதி இரவு தனது கடையை அடைத்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவருடன் நண்பர் சரவணக்குமாரும் வந்தார்.

இவர்களது வாகனத்தை சிம்மக்கல் தைக்கால் பாலத்தில் போலீசார் லத்தியை காண்பித்து மறித்து உள்ளனர். ஆனால் மோட்டார் சைக்கிளை சரவணக்குமார் நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ஒருவர் லத்தியை மோட்டார் சைக்கிளை நோக்கி வீசினார். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விவேகனாந்தகுமாரும், சரவணக்குமாரும் படுகாயம் அடைந்தனர். இதில் விவேகானந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவேகனாந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா தனது உறவினர்களுடன் 17-ந் தேதி காலை மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர்(பொறுப்பு) சாந்தகுமாரை சந்தித்து மனு கொடுத்தார். மேலும் போலீஸ் மீது நடவடிக்கை எடுத்தால் தான் தனது கணவரின் உடலை வாங்குவேன் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார். மேலும் கஜப்பிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கும் முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில் கஜப்பிரியாவிற்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரண தொகை அறிவிக்க வேண்டும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் விவேகானந்தகுமார் உடலை வாங்குவோம் என்று அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

5-வது நாளாக நேற்றும் அவர்களது போராட்டம் நடந்தது. ஆண்களும் பெண்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக திலகர் திடல் போலீஸ்காரர் ரமேஷ்பாபு என்பவர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பிறப்பித்தார்.

Next Story