வெள்ளகோவிலில் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் நகை– பணம் திருட்டு


வெள்ளகோவிலில் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் நகை– பணம் திருட்டு
x
தினத்தந்தி 24 Jun 2019 10:15 PM GMT (Updated: 24 Jun 2019 6:48 PM GMT)

வெள்ளகோவிலில் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் மு.பழனிசாமி நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 60), விசைத்தறி உரிமையாளர். இவர் வெள்ளகோவில்–முத்தூர் ரோட்டில் வாடகை கட்டிடத்தில் விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23–ந் தேதி பகல் 11 மணிக்கு கல்யாணசுந்தரம் வீட்டை பூட்டி விட்டு, தனது மனைவியுடன், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை 10–30 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தோடு, நெக்லஸ், சங்கிலி உள்ளிட்ட 6 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது பற்றி வெள்ளகோவில் போலீசில் கல்யாணசுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து, சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

திருடர்கள் வீட்டு காம்பவுண்டு சுவரில் ஏறி உள்ளே குதித்து பூட்டை திறக்காமல், உடைக்காமல், கதவை நெம்பி உள்ளே சென்றுள்ளனர். வீட்டினுள் இருந்த பீரோ சாவி பீரோவின் மேலே இருந்ததால் சாவியை எடுத்து பீரோவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தையும் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள்.


Next Story