ஜோலார்பேட்டையில் நீரேற்றுவதற்காக கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட எலக்ட்ரிக்கல் எந்திரங்கள்


ஜோலார்பேட்டையில் நீரேற்றுவதற்காக கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட எலக்ட்ரிக்கல் எந்திரங்கள்
x
தினத்தந்தி 30 Jun 2019 10:00 PM GMT (Updated: 30 Jun 2019 7:35 PM GMT)

ஜோலார்பேட்டையில் நீரேற்றுவதற்காக கோவையில் இருந்து எலக்ட்ரிக்கல் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

ஜோலார்பேட்டை, 

சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து டேங்கர் ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான ஆய்வு பணிகள் 2 கட்டமாக நடத்தப்பட்டது. அப்போது மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோமீட்டர் தூரம் வரை உள்ள ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் உள்ள பார்சம்பேட்டை ரெயில்வேகேட் என்ற இடத்தில் ரெயில்வேக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்வது என ஆலோசித்தனர்.

அதன்பிறகு இதற்காக ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து பெரிய குழாய்கள் லாரியில் எடுத்து வரப்பட்டு, பார்சம்பேட்டை ரெயில்வே கேட் என்ற இடத்தில் குழாய்கள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டது.

இந்த நிலையில் ரெயில்வே துறை சார்பில், கோவையில் இருந்து நீரேற்றும் எலக்ட்ரிக்கல் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் மேட்டுசக்கரகுப்பம் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நீர் எடுத்து செல்லப்படும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நீரேற்றும் எந்திரங்கள் ரெயில்வே துறை சார்பில் பொருத்தப்படும். ரெயில்வே தண்டவாளத்திற்கு அடியில் சுமார் 800 மீட்டர் தூரமும், மற்ற பகுதியில் 2400 மீட்டர் தூரமும் குழாய்கள் பதிக்கப்படும், இப்பணி விரைந்து முடிக்கப்பட்டு, வருகிற 10&ந் தேதிக்குள் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்லப்படும் என்றனர்.

Next Story