மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற போலீசார் தஞ்சையில் சந்திப்பு


மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற போலீசார் தஞ்சையில் சந்திப்பு
x
தினத்தந்தி 30 Jun 2019 10:45 PM GMT (Updated: 30 Jun 2019 7:38 PM GMT)

மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற போலீசார் தஞ்சையில் சந்தித்தனர். அவர்கள் குடும்பத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை உள்ளது. இங்கு புதிதாக போலீசாருக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1986-ம் ஆண்டு 1,200 பேர் பயிற்சி பெற்றனர். அப்போது பயிற்சி மையத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் அனுப்ஜெஸ்வால்.

அப்போது பயிற்சி பெற்றவர்கள் இப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 33 ஆண்டுகளுக்குப்பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி குடும்ப விழாவாக தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

கட்டித்தழுவினர்

இதில் பங்கேற்றவர்கள் தனது குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர்கள் வந்து கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை பார்த்ததும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலு தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகசுந்தரம் வரவேற்றார்.

இவர்கள் பயிற்சி பெற்ற போது போலீஸ் சூப்பிரண்டாக இருந்த அனுப்ஜெஸ்வால் பின்னர் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று தற்போது ஓய்வு பெற்று விட்டார். அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிவண்ணன், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் ரபீக், கருணாநிதி, ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

நலிந்தவர்களுக்கு உதவி

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், “நாங்கள் பயிற்சி பெற்ற போது எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் அனுப்ஜெஸ்வால். அவர் ஏராளமானோருக்கு உதவிகள் செய்துள்ளார். நாங்களும் ஒரு அமைப்பு போல ஏற்படுத்தி, நலிந்தவர்களுக்கு உதவி செய்வது, இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சாதி, மதம் பார்க்காமல் எங்களுக்குள் திருமணம் செய்வது போன்றவற்றை செய்து வருகிறோம்”என்றனர்.

Next Story