பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறப்பு


பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 6 July 2019 10:45 PM GMT (Updated: 6 July 2019 8:11 PM GMT)

பாசனத்துக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இரு போக சாகுபடி நடந்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணை கடந்த 28-ந்தேதி திறக்கப்பட்டது. தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 756 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் கிடுகிடுவென குறையத் தொடங்கியது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 9.65 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது.

இப்படியே சென்றால் அணை வரண்டுவிடும் என்பதாலும், விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதாலும் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதால் விவசாய தேவை பூர்த்தி செய்யும் விதமாக பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மே லும் தேவை எனில் சிற்றார் அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படும்“ என்றார்.

தண்ணீர் வரத்து

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 259 கனஅடி தண்ணீர் வந்தது.

பெருஞ்சாணி அணைக்கு 128 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 1 கனஅடி தண்ணீரும் வந்தது.

மழை அளவு

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-10, பூதப்பாண்டி-6.8, சுருளோடு-11, கன்னிமார்-4.2, ஆரல்வாய்மொழி-7.2, பாலமோர்-19.8, மயிலாடி-6.8, ஆனைகிடங்கு- 8.2, குருந்தன்கோடு-3, அடையாமடை-7, முள்ளங்கினாவிளை-8, புத்தன்அணை-11.2, திற்பரப்பு-8, தக்கலை-6 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

இதே போல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-12, பெருஞ்சாணி-12.8, சிற்றார் 1 -6.2, சிற்றார் 2 -7, மாம்பழத்துறையாறு-7 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

Next Story