சென்னை விமான நிலையத்தில் ரூ.20½ லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.20½ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 July 2019 10:00 PM GMT (Updated: 8 July 2019 8:04 PM GMT)

சென்னை விமான நிலையத்தில், சவுதிஅரேபியா, கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து குவைத் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அதில் ஆந்திர மாநிலம் புரோடத்தூரை சேர்ந்த நசீர் அகமது ஷேக்(வயது 24) என்பவர் வந்தார். சந்தேகத்தின்பேரில் அவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர், உடைமைகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 346 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த நானா ஷிப்பாயா(51) என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 232 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

இலங்கை பெண் உள்பட 2 பேரிடம் இருந்தும் ரூ.20 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 578 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை இவர்கள் இருவரும் யாருக்காக சவுதிஅரேபியா, கொழும்பில் இருந்து கடத்தி வந்தனர்? என விசாரித்து வருகின்றனர்.

Next Story