மது விற்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து மதுபாட்டில்கள் உடைத்து எரிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் ஆத்திரம்


மது விற்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து மதுபாட்டில்கள் உடைத்து எரிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் ஆத்திரம்
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 5:36 PM GMT)

சீர்காழி அருகே மது விற்பனைக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள், மது விற்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து மதுபாட்டில்களை உடைத்து எரித்தனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கங்கா(வயது43). இவர் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபான பாட்டில்களை வாங்கி வந்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் 100 நாள் வேலைக்கு பெண்கள் சென்றனர். அப்போது அங்கு கங்காவின் வீட்டு வாசலில் ஆண்கள் கூட்டமாக நின்று மது வாங்கி கொண்டிருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுசேர்ந்து கங்காவின் வீட்டுக்குள் புகுந்து மதுபாட்டில்களை வெளியே கொண்டு வந்து சாலையில் போட்டு உடைத்து தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா சம்பவ இடத்துக்கு சென்று கங்காவை கைது செய்து சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

Next Story