திருவள்ளூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை


திருவள்ளூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 12 July 2019 10:00 PM GMT (Updated: 12 July 2019 7:44 PM GMT)

திருவள்ளூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடியே 30 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 40). டி.வி. மெக்கானிக். இவர் கடந்த 20 ஆண்டுகளாக அதே பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் பேரம்பாக்கம், கூவம், குமாரச்சேரி, களாம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி போன்ற சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மாத சீட்டில் சேர்ந்து மாதம்தோறும் பணம் செலுத்தி வந்தனர். ஏலச்சீட்டு முடியும் தறுவாயில் ஏலச்சீட்டில் கலந்துகொண்டவர்கள் தங்கள் பணத்தை கேட்டபோது பணத்தை திருப்பி தருவதாக கூறி வந்த மோகன் கடந்த 30-ந் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு தன் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.

இவ்வாறாக அவர் ஏலச்சீட்டில் பணம் செலுத்தியவர்களின் ரூ.2 கோடியே 30 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

இதை அறிந்த அவரிடம் ஏலச்சீட்டில் பணம் செலுத்தியவர்கள் பல இடங்களில் அவரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் மோகனை கைது செய்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுத்தருமாறு கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story