விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு


விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 9:31 PM GMT)

விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆனந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நீதிபதிகள் சங்கர், அருணாச்சலம், முத்துக்குமாரவேல், ராமகிரு‌‌ஷ்ணன், மோகன், உத்தமராஜ், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப் பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 9 ஆயிரத்து 18 வழக்குகளும், நிலுவையில் இல்லாத வழக்குகளாக 3 ஆயிரத்து 500 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இம்முகாமில் ஓய்வு பெற்ற நீதிபதி தண்டபாணி, நீதிபதிகள் செங்கமலசெல்வன், கோபிநாதன், வெங்கடேசபெருமாள், ஆயி‌ஷாபேகம், மாஜிஸ்திரேட்டு அருண்குமார், வக்கீல்கள் வேலவன், ராஜாராம், ரத்தினசபாபதி, சந்திரமவுலி, இளங்கோவன், உலகநாதன், ராஜகுரு, கருணாமூர்த்தி, சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் அரிதாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர். இதன் முடிவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 2,349 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.8 கோடியே 68 லட்சத்து 63 ஆயிரத்து 571-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் நிலுவையில் இல்லாத வழக்குகளில் 201 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 604-க்கு தீர்வு காணப்பட்டது.

Next Story