பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் போலீஸ் நிலைய நூற்றாண்டு விழாவில் திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பேச்சு


பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் போலீஸ் நிலைய நூற்றாண்டு விழாவில் திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 17 July 2019 10:45 PM GMT (Updated: 17 July 2019 8:06 PM GMT)

பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என போலீஸ் நிலைய நூற்றாண்டு விழாவில் திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கூறினார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி போலீஸ் நிலையம் கடந்த 1919-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த போலீஸ் நிலையத்தின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கான இலவச மருத்துவமுகாம், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமுகாமினை திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவி களுக்கு நோட்டு புத்தகங்களுடன் கூடிய பைகள் வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து க.பரமத்தி போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி சரகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு போலீஸ் நிலையமும் எந்த நாளில் ஆரம்பிக்கப்பட்டதோ, ஒவ்வொரு ஆண்டும் அதேநாளில் போலீஸ் நிலைய நாள் என்று கொண்டாட இருக்கின்றோம். அன்றைய தினத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சட்டம்-ஒழுங்கு குறித்த விழிப்புணர்வையும், குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும், போலீஸ் துறைக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நட்புணர்வு ஏற்படும் வகையிலுமான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் க.பரமத்தி போலீஸ் நிலையத்தில்தான் நூற்றாண்டு விழாவோடு மருத்துவமுகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. இந்த மருத்துவ முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்து தந்துள்ள மாவட்ட கலெக்டருக்கும், சுகாதாரத்துறையினருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்த போலீஸ் நிலையம் இருக்கின்றது. பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம். பெற்றோர்கள் உங்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும், பள்ளி மாணவ-மாணவர்களுக்கும் சாலைபாதுகாப்பின் முக்கியத்துவத்தை சொல்லிகொடுக்க வேண்டும்.

குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிக்காமல் படிப்படியாக குறைக்கப்பட்டு எங்கள் பகுதியில் குற்றச்செயல்களே இல்லை என்ற நிலையை உருவாக்க போலீஸ் துறையினருடன் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்பட போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story