பால்கரில் ரூ.1½ கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது


பால்கரில் ரூ.1½ கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2019 10:00 PM GMT (Updated: 20 July 2019 7:22 PM GMT)

பால்கரில் ரூ.1½ கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வசாய்.

பால்கர் வாலிவ் போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்த போது அதில் பெரிய சாக்கு மூட்டை இருந்தது. இதில், சந்தேகமடைந்த போலீசார் சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது, அதில் ஓபியம் மற்றும் லவுட்டானும் என்ற போதைப்பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

இதையடுத்து போலீசார் காரில் வந்த இருவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த சோனாராம் பிஸ்னாய் (வயது 33) மற்றும் பஜன்லால் பிஸ்னாய் (22) என்பது தெரியவந்தது.

இதில் இவர்கள் ஜோத்பூரில் தொழில் செய்த போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் போதைப்பொருளை பால்கரில் உள்ள டீக்கடை மற்றும் ஓட்டல்களில் விற்க தொடங்கியுள்ளனர். இதில் குறுகிய காலத்திலேயே அதிக பணம் கிடைத்ததால் தொடர்ந்து போதைப்பொருளை விற்று வந்துள்ளனர்.

இதில் அவர்கள் போதைப்பொருளை ராஜஸ்தானிலிருந்து காரில் கடத்தி வந்து பால்கரில் உள்ள கடைகளில் விற்றது தெரியவந்தது. போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பிலான ஓபியம் மற்றும் லவுட்டானும் என்ற போதை பொருள்கள் மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story