ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி திருட்டு 2 பேருக்கு வலைவீச்சு


ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி திருட்டு 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 July 2019 10:15 PM GMT (Updated: 20 July 2019 10:05 PM GMT)

திருமக்கோட்டை அருகே ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூர் ராஜாதெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது35). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செவ்வந்தி (30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. நேற்று 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் செவ்வந்தியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை ஜோதிடர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களிடம், செவ்வந்தி தனக்கு குழந்தை இல்லை என்று கூறி உள்ளார்.

இதையடுத்து 2 பேரும், ஜாதகம் பார்ப்பது போல் நடித்து, ‘உங்களுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது, ஆதலால் கழுத்தில் அணிந்துள்ள சங்கிலியை கழற்றி தாருங்கள். சுடுகாட்டில் வைத்து பூஜை செய்து தருகிறோம்’ என கூறினர்.

9 பவுன் சங்கிலி

இதை நம்பிய செவ்வந்தி தனது கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை கழற்றி கொடுத்தார். அந்த சங்கிலியை வாங்கி கொண்ட 2 பேரும் சுடுகாட்டில் வைத்து பூஜை செய்து விட்டு திரும்ப கொண்டு வருகிறோம் என கூறி விட்டு தாங்கள் வந்த மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் திரும்ப வரவில்லை.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் 2 பேரும் ஜோதிடர்கள் போல் நடித்து 9 பவுன் சங்கிலியை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செவ்வந்தி, திருமக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story