அழகு நிலைய பெண் ஊழியர் கொலை: தலைமறைவாக இருந்த கணவர் கைது


அழகு நிலைய பெண் ஊழியர் கொலை: தலைமறைவாக இருந்த கணவர் கைது
x
தினத்தந்தி 21 July 2019 10:00 PM GMT (Updated: 21 July 2019 5:31 PM GMT)

சூளகிரியில் அழகு நிலைய பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை மனைவி கைவிடாததால் கொன்றதாக அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சூளகிரி,

விழுப்புரம் மாவட்டம் வட பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சாந்தி (வயது 33). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. 14 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். சாந்தி சூளகிரியில் பேரிகை சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, சூளகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) ஊழியராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூளகிரிக்கு வந்த இளையராஜாவுக்கும், சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் சாந்தியின் வீட்டுக்கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்த போது வீட்டில் சாந்தி கொலை செய்யப்பட்டு கிடந்ததும், அவரது கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி ஜன்னல் கம்பியில் கட்டி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடி வந்தனர். இந்த நிலையில் இளையராஜா விழுப்புரம் மாவட்டம் வட பொன்பரப்பி கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்கள். அப்போது அவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சூளகிரி அழைத்து வந்தனர்.

கைதான இளையராஜா போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நானும், சாந்தியும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நான் கடந்த 2008-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றேன். அங்கு என்னுடன் சூளகிரி அருகே உள்ள மடத்தூரைச் சேர்ந்த நாகப்பா என்பவரின் மகன் சேட்டு (35) என்பவர் வேலை செய்து வந்தார். நாங்கள் 2 பேரும் நண்பர்களாக இருந்தோம்.

எனது மனைவிக்கு நான் செல்போனில் பேசுவேன். சில நேரம் எனது போனில் பேச முடியாவிட்டால் சேட்டுவின் செல்போனை வாங்கி பேசுவேன். இதனால் எனது மனைவி சாந்தியிடம் சேட்டுவின் செல்போன் எண் இருந்தது. அவளும் அடிக்கடி சேட்டுவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு என்னிடம் பேசுவாள். நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நேரத்தில் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேட்டு சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அவர், வட பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று எனது மனைவியுடன் பழகி வந்தார். மேலும் அவர் சாந்திக்கு தனியாக வீடு பார்த்து தங்க வைத்தார். எனது மனைவியை காணவில்லை என்று ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நான் அங்குள்ள போலீசில் புகார் செய்தேன். பின்னர் அவரை மீட்ட போலீசார் என்னுடன் சேர்த்து வைத்தனர்.

இதன் பிறகு நான் மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்று விட்டேன். எனது மனைவியை சந்தித்த சேட்டு அவரை தனியாக அழைத்து வந்து சூளகிரியில் வாடகைக்கு வீடு பார்த்து தங்க வைத்தார். எனது குழந்தைகள் 2 பேரும் வட பொன்பரப்பியில் இருக்க, சேட்டு எனது மனைவியுடன் உல்லாச வாழ்க்கை நடத்தினான். மேலும் அவளுக்கு அழகு நிலையம் ஒன்றில் வேலை வாங்கி கொடுத்தான்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டில் அவர்கள் குடி போனார்கள். ஊருக்கு வந்த எனக்கு எனது மனைவி சூளகிரியில் இருப்பதாக தகவல் அறிந்து இங்கு வந்தேன். அவள் வேலை செய்து வரும் அழகு நிலையத்திற்கு சென்று அவளிடம் நீ செய்வது சரியா? என கேட்டு தகராறு செய்தேன். சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு சென்ற நான், அவளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். பின்னர் இரவு அவள் தூங்க சென்றாள். இரவு முழுவதும் தூங்காமல் இருந்த நான், கள்ளத் தொடர்பை கைவிடாத எனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி வீட்டில் இருந்த சுத்தியலால் அவளது தலையில் 2 முறை ஓங்கி அடித்தேன். அதில் அவள் அலறினாள்.

அவளது சத்தம் வெளியே கேட்டு விடக்கூடாது என்பதற்காக வீட்டில் இருந்த டி.வி.யை அதிக சத்தத்துடன் வைத்தேன். பிறகு நைலான் கயிறு மூலம் அவளது கழுத்தை இறுக்கி கொன்றேன். பின்னர் அவளது கழுத்தை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தேன். இந்த வீட்டிற்கு சேட்டு அடிக்கடி வந்து செல்வதால் பழி அவன் மீது விழட்டும் என்று எண்ணி நான் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி வைத்து விட்டு எனது சொந்த ஊருக்கு சென்று விட்டேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு இளையராஜா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைதான இளையராஜாவை போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக சேட்டுவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story