ராயக்கோட்டை துர்க்கை மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


ராயக்கோட்டை துர்க்கை மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 July 2019 10:30 PM GMT (Updated: 23 July 2019 8:17 PM GMT)

ராயக்கோட்டை துர்க்கை மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராயக்கோட்டை,

ராயக்கோட்டையில் கிருஷ்ணகிரி சாலையில் ஸ்ரீ துர்க்கை மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதத்தில் கோவில் திருவிழா மற்றும் தீ மிதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி அன்று இரவு சக்தி கரகம் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை கலச பூஜை, மகா மங்களாரத்தியும், இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தொடர்ந்து மழை வேண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகளும் நடந்தது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை 5 மணிக்கு ஸ்ரீ வஜ்ரநாதேஸ்வரர் கோவிலில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரமும், மலர்களால் சிறப்பு பூஜையும் நடந்தது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு தீ மிதி விழா தொடங்கியது. இதில் முதலில் சாமியை தூக்கியவாறு பூசாரிகள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். அதைத் தொடர்ந்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதே பெண் பக்தர்கள் குழந்தைகளுடன் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். விழாவை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு ராயக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story