10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 30 July 2019 6:34 PM GMT)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் விழுப்புரம் மாவட்டக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில துணை செயலாளர் பாரதிஅண்ணா கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

மாற்றுத்திறனாளிகளில் கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாள் வேலை, தினக்கூலி ரூ.229, வேலை நேரம் 4 மணி நேரம் என்பதை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கி வேலை வழங்க வேண்டும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் சட்டப்படி 5 சதவீதம் கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் தீபா, பொருளாளர் யுவராஜ், துணைத்தலைவர்கள் சுப்பராயன், மகாலிங்கம், துணை செயலாளர்கள் முருகன், பூபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story