கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் வாயில் கருப்பு துணி கட்டி டாக்டர்கள் போராட்டம்


கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் வாயில் கருப்பு துணி கட்டி டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 July 2019 10:15 PM GMT (Updated: 31 July 2019 6:40 PM GMT)

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வாயில் கருப்பு துணியை கட்டி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு தலைமை ஆஸ்பத்திரியில், இந்திய மருத்துவ கழகத்தை கலைப்பதை எதிர்த்தும், மருத்துவத் துறைக்கும், பொதுமக்களுக்கும் எதிரான தேசிய மருத்துவ ஆணையம் அமைவதை திரும்ப பெற வலியுறுத்தியும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி கிருஷ்ணகிரி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு நேற்று டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் தனசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் டாக்டர்கள் ஜோ, சரவணன், குமரேசன், கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் பொருளாளர் டாக்டர் கோவிந்தராஜீலு நன்றி கூறினார்.

போராட்டத்தின் போது பேசிய நிர்வாகிகள்:- டாக்டர்கள், மருத்துவத்துறை, மருத்துவ மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கும், இந்திய மருத்துவத்தை நீர்த்து போக செய்யாமல் இருக்கவும், போலி மருத்துவத்தை நுழைக்காமல் இருக்கவும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இப்போராட்டத்தின் மூலம் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. பொதுமக்களின் சிகிச்சைக்கு எவ்வித பாதிப்பும் வராமல் நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து, இந்த மசோதாவை எதிர்த்து மக்களும் கரம் கொடுக்க வேண்டும் என்றனர்.

இந்த போராட்டத்தால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று உள்நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் வெளி நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

Next Story