கிருஷ்ணகிரி அருகே விவசாயி கொலை: 5 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே விவசாயி கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கங்கலேரி பக்கமுள்ளது பூதிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமு என்கிற ராமன் (வயது 42). விவசாயியான இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கல்லால் தாக்கி கொலை செய்தது. பின்னர் இவரது உடலில் கல்லை கட்டி கங்கலேரி பக்கமுள்ள வட்டிகானப்பள்ளி என்னும் இடத்தில் விவசாய கிணறு ஒன்றில் வீசி சென்றது.
இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் விசாரணையில் கொலை நடப்பதற்கு முன்பாக அவர் கையில் ரூ.50 ஆயிரம் வரை வைத்திருந்ததும், அவரிடம் இருந்து அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே மர்ம நபர்கள் அவரை கொலை செய்து உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றதும் தெரிய வந்தது.
இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, விவசாயி ராமு கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.
Related Tags :
Next Story