நிலத்தகராறில் விவசாயி உள்பட 3 பேரை கொல்ல முயற்சி 3 பேருக்கு வலைவீச்சு
காவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறில் விவசாயி உள்பட 3 பேரை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுண்டேகுப்பம் மணி நகரைச் சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 40). இவரது அண்ணன் ராமசாமி (50). விவசாயிகளான இவர்களுக்குள் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் காளியம்மன் கோவில் அருகில் ஊர் பிரமுகர்கள் சிலர் கூடி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அங்கு வந்த ராமசாமி, இவருடைய மகன் சின்னசாமி (21) மற்றும் மாதேஷ் (21) ஆகிய 3 பேரும் கல்லாலும், இரும்பு கம்பியாலும் எல்லப்பனை சரமாரியாக தாக்கினார்கள். மேலும் இதை தடுக்க சென்ற எல்லப்பனின் உறவினர் கோவிந்தசாமி (50) மற்றும் சக்திவேல் (25) ஆகியோரையும் அவர்கள் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதில் காயம் அடைந்த எல்லப்பன், கோவிந்தசாமி, சக்திவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக எல்லப்பன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சின்னசாமி, அவரது தந்தை ராமசாமி மற்றும் மாதேஷ் ஆகிய 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story