தண்டவாளத்தில் வாலிபர் பிணம்: போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை தகனம் செய்த தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு


தண்டவாளத்தில் வாலிபர் பிணம்: போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை தகனம் செய்த தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Aug 2019 10:15 PM GMT (Updated: 11 Aug 2019 8:00 PM GMT)

செந்துறையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை போலீசாருக்கு தெரிவிக்காமல் தகனம் செய்த தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறையை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ரத்தினசாமி (வயது 23). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர், நேற்று முன்தினம் இரவு செந்துறை ரெயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தில் மார்பில் பலத்த காயத்துடன், கை கால்கள் முறிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ரத்தினசாமியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை தகனம் செய்து விட்டதாக தெரிகிறது.

5 பேர் மீது வழக்கு

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் ரத்தினசாமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ரத்தினசாமியின் உடலை தகனம் செய்து விட்டதாக, அவரது உறவினர்கள் ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்காமல் பிணத்தை தகனம் செய்ததாக ரத்தினசாமியின் தந்தை ராமசாமி உள்பட 4 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்தினசாமி ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story