தந்தை-மகன் வெட்டிக்கொலை: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள் மனு


தந்தை-மகன் வெட்டிக்கொலை: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள் மனு
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 5:46 PM GMT)

தந்தை-மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று சமூக ஆர்வலர்கள் மற்றும் குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குளித்தலை அருகே உள்ள முதலைபட்டி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத் திய சமூக ஆர்வலர் வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் முதலைபட்டியில் படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு தேவையான உதவிகளும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் தமிழக அரசு வழங்கவேண்டும்.

உரிய நடவடிக்கை

குளித்தலை பகுதியில் உள்ள அரசு நிலங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் சம்பந்தமாக போராடும் சமூக ஆர்வலர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது தாமதம் இல்லாமல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினர்.


Next Story