தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ரத்து செய்யக் கோரி பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம்


தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ரத்து செய்யக் கோரி பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 7:02 PM GMT)

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ரத்து செய்யக் கோரி தஞ்சையில் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி புரிந்து வரும் பயிற்சி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தை நடத்தினர். இதற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்க மாநில செயலாளரும், பயிற்சி டாக்டருமான அருணந்தி தலைமை தாங்கினார். பயிற்சி டாக்டர்களின் போராட்டத்திற்கு மருத்துவ மாணவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இந்த மசோதாவினால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே இருந்த இந்திய மருத்துவக்கழகமே தொடர வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.

பணி பாதுகாப்பு

நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக்கூடாது. இணைப்பு படிப்புகளை புகுத்தக்கூடாது. வரைவு தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். டாக்டர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஏராளமான பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர். அவசர சிகிச்சை பிரிவில் பணி புரியும் பயிற்சி டாக்டர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றனர். மற்ற பயிற்சி டாக்டர்களின் வேலை நிறுத்தத்தினால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

Next Story