குடிமராமத்து திட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது


குடிமராமத்து திட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 7:10 PM GMT)

குடிமராமத்து திட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது என்று, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி பழவாறு தூர் வாரும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கும்பகோணம் உதவி கலெக்டர்(பொறுப்பு) ஜெயபாரதி, கும்பகோணம், திருவிடைமருதூர் தாசில்தார்கள் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, கரூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் தூர்வாருதல் மற்றும் குடிமராமத்து திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பாசன மற்றும் வடிகாலுக்கு பயன்படும் ஏ மற்றும் பி வகை வாய்க் கால்கள், பெரிய ஆறுகள், குளங்கள், ஓடைகள் போன்றவற்றில் மேட்டூர் அணையில் திறந்துவிடப்படும் நீர் மற்றும் மழை, வெள்ள காலங்களில் கிடைக்கும் உபரி நீரை சேமிக்க வேண்டும் என்பதே முதல்- அமைச்சரின் நோக்கம். இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு தூர்வாரும் பணிக்கு ரூ.60.85 கோடியும், குடிமராமத்து திட்டத்துக்கு ரூ.500 கோடியும் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களில்...

இதில் காவிரி டெல்டாவில் உள்ள 9 மாவட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 1800-க்கும் மேற்பட்ட குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தூர்வாரும் பணியின் தரத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.வெளி மாவட்டங்களில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 வாரங்களில் அனைத்து பணிகளும் இரவு பகலாக செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மணிவாசன் கூறினார்.

Next Story