மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் தேசப்பற்றை மறக்காத கிராம மக்கள் பரிசலில் சென்று தேசிய கொடியை ஏற்றினர்


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் தேசப்பற்றை மறக்காத கிராம மக்கள் பரிசலில் சென்று தேசிய கொடியை ஏற்றினர்
x
தினத்தந்தி 16 Aug 2019 12:04 AM GMT (Updated: 16 Aug 2019 12:04 AM GMT)

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் தேசப்பற்றை மறக்காமல் ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் சுதந்திர தினவிழாவை கொண்டாடினார்கள். அவர்கள் பரிசலில் சென்று தேசியக்கொடியை ஏற்றினார்கள்.

பெங்களூரு,

மராட்டியம் மற்றும் வடகர்நாடகத்தில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டன. கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி மழை வெள்ளம் ஓடியது. இந்த வெள்ளம் கரையோர கிராமங்களிலும் புகுந்தது. இதனால் கிருஷ்ணா ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஏராளமான கிராமங்கள் மழை வெள்ளத்தில் மிதந்தன.

மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவ வீரர்கள் படகுகள் உதவியுடன் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த மழை வெள்ளத்துக்கு ஏராளமானோர்கள் உயிரிழந்தனர். இதேபோல, பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா சுரபலி கிராமமும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிதந்தது.

இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் பாகல்கோட்டை, விஜயாப்புரா மாவட்டங்களிலும் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஜமகண்டி தாலுகா சுரபலி கிராமம் மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தாலும், உயிர் பலி ஏற்பட்டாலும் அந்த கிராம மக்கள் தேசப்பற்றை மறக்கவில்லை. அந்த கிராமத்தில் இன்னும் மழை வெள்ளம் முழுமையாக வடியவில்லை.

ஆனாலும் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள், பரிசலில் நின்றப்படி கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். அந்த கிராம மக்களின் தேசப்பற்று, அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளது.

இதேபோல, உனகுந்தா பகுதியில் ஒரு பள்ளியில் மார்பளவு கிடக்கும் தண்ணீரில் நீந்தியப்படி மாணவர்கள் சிலர் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். இந்த தேசப்பற்று மெய்சிலிர்க்க வைத்தது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story