ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர முடிவு?


ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர முடிவு?
x
தினத்தந்தி 16 Aug 2019 11:36 PM GMT (Updated: 16 Aug 2019 11:36 PM GMT)

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக கடந்த மாதம்(ஜூலை) 26-ந் தேதி பதவி ஏற்றார்.

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால் சட்டசபையின் பலம் 207 ஆக குறைந்துவிட்டது. இதன் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் 17 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், எடியூரப்பா அரசு நீடிக்க முடியாத நிலை உண்டாகும்.

இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க, ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா உள்பட 22 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தால், சட்டசபையில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துவிடும். இடைத்தேர்தலில் தோற்றாலும் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.

சட்டசபையில் ஒரு கட்சிக்கு மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் மூன்றில் 2 பங்கு எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினால், அவர்களுக்கு கட்சி தாவல் தடை சட்டம் பொருந்தாது. அந்த சட்டத்தில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியும். அவர்கள் சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

சமீபத்தில் கோவா மாநிலத்தில் இத்தகைய நிகழ்வு நடந்தது. அதாவது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாவில் சேர்ந்தனர். தற்போது ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு கர்நாடகத்தில் 34 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

Next Story