கொடைக்கானல் அருகே பயங்கரம்: தோட்ட காவலாளி குத்திக் கொலை


கொடைக்கானல் அருகே பயங்கரம்: தோட்ட காவலாளி குத்திக் கொலை
x
தினத்தந்தி 18 Aug 2019 12:00 AM GMT (Updated: 17 Aug 2019 7:50 PM GMT)

கொடைக்கானல் அருகே தோட்ட காவலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் அருகே உள்ள பெரியூர் ஊராட்சி மன்றவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அந்த தோட்டத்தில், பெரும்பாறையை சேர்ந்த சக்திவேலும் (40) தொழிலாளியாக வேலை செய்தார்.

நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் 2 பேரும் மது அருந்தினர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக செந்தில்குமாரை குத்தினார். இதனால் நிலை குலைந்து போன செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இதையடுத்து சக்திவேல் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

நேற்று அதிகாலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள், செந்தில்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கொடைக் கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சக்திவேலை ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தோட்ட காவலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story