பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம்


பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 9:06 PM GMT)

பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம்,

பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான வாழ்நாள் வரையிலான ஓய்வூதிய திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் முதுமை காலத்தை கருத்தில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்யும் சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு வாழ்நாள் வரை ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

18 முதல் 40 வயது வரையிலான சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களது வயதுக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை பொது இ-சேவை மையத்தில் 60-வது வயது வரை பணம் செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை மத்திய அரசும் சந்தாதாரர் கணக்கில் செலுத்தும்.

ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி என இருவரும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் தனித்தனியாக இணைந்து கொள்ளலாம். சந்தாதாரர் இத்திட்டத்தை தொடர விருப்பமில்லையெனில் அவர் செலுத்திய தொகை 5 ஆண்டுகளுக்கு பிறகு வங்கி வட்டி விகிதத்தில் வட்டியுடன் திரும்ப தரப்படும். திட்ட காலத்திற்கு பிறகு சந்தாதாரர் இறக்கும் பட்சத்தில் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு மாதம் ரூ.1500 வீதம் அவர்களது இறுதிக்காலம் வரை கிடைக்கும்.

ஏற்கனவே பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அதே வங்கி கணக்கு வாயிலாக ஓய்வூதிய திட்டத் தொகையினை செலுத்தலாம். எனவே இத்திட்டத்தில் இணைய விரும்பும் சிறு, குறு விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்தை உடனே அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

Next Story