திருக்கனூர், பாகூர் பகுதியில் தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன


திருக்கனூர், பாகூர் பகுதியில் தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன
x
தினத்தந்தி 18 Aug 2019 10:50 PM GMT (Updated: 18 Aug 2019 10:50 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக பெய்து வரும் தொடர் மழையால், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து அவை நிரம்பி வருகின்றன. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலத்தில் பரவலாக கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை நேற்றுக் காலை சுமார் 11 மணி வரை நீடித்தது. இந்த தொடர்மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் பொதுப்பணித்துறை, உள்ளாட்சிதுறை அதிகாரிகள் விரைந்து சென்று மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். புதுவையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 6.5 செ.மீ. மழை பதிவானது.

வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர், பாகூர், அரியாங்குப்பம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த தொடர் மழை காரணமாக ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிறிய குளங்கள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக கன்னியக்கோவில் கிராமத்தின் அருகில் உள்ள மணப்பட்டு தாங்கல் ஏரி நிரம்பி வழிகிறது. அதேபோல் பாகூரில் உள்ள பிள்ளையார் குளமும் நிரம்பி உள்ளது.

இதற்கிடையே ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. கன்னியக்கோவில் கிராமத்தில் இருந்து பாகூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு சிறிய பாலம் கடந்த ஆண்டு பெய்த மழையால் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. தற்போது வரை அந்த பாலம் சீரமைக்கப்படாததால் மேலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் காலனியை சேர்ந்த புஷ்பகாந்தி (வயது 50) என்பவரின் குடிசை வீடு இடிந்து சேதமடைந்தது. மேலும் நேற்று முன்தினம் இரவு பாகூர், சேலியமேடு, குடியிருப்புபாளையம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளன்சந்தை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. அதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளானார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story