இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணியாவிட்டால் அபராதம் அமைச்சர் பேட்டி


இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணியாவிட்டால் அபராதம் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 19 Aug 2019 11:15 PM GMT (Updated: 19 Aug 2019 6:35 PM GMT)

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

திருச்சி,

திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக ‘இ - செலான்’ மூலம் போக்குவரத்துத் விதிமுறை மீறல்களுக்கு அபராதம் விதிக்கும் கருவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் வளர்மதி முன்னிலை வகித்தார். விழாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு ‘இ-செலான்’ கருவிகளை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அபராதம் விதிக்கும்போது வெளிப்படை தன்மையுடன் இருப்பதற்காகவும், விதிமுறை மீறல் தவறுகளை செய்தவர்களின் வீண் அலைச்சல்களை தவிர்ப்பதற்கும் இந்த கருவி பயன்படும். இந்த கருவி மூலம் அபராதம் விதிக்கும் முறை ஏற்கனவே காவல் துறையில் அமலுக்கு வந்துவிட்டது. போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு இந்த கருவி இப்போது தான் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த கருவிகள் வழங்கப்படும்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சாலைப்பாதுகாப்பு நிதி ரூ.40 கோடி வழங்கினார். அந்த தொகை தற்போது ரூ.60 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலை நாடுகளில் இருப்பதுபோல் தமிழகத்திலும் சாலை விதிகளை மீறுபவர்களை தானியங்கி கருவிகள் மூலம் கண்டுபிடித்து அபராதம் விதிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்காக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு முதல் திருச்சி வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி ரூ.25 கோடியில் நடந்து வருகிறது. அதிக விபத்துக்கள் நடைபெறக்கூடிய மற்ற சாலைகளிலும் இதுபோல் கருவிகள் பொருத்தப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

இ-செலான் கருவிகள் மூலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் விதிமுறை மீறல் செய்தவர்களிடம் சம்பவ இடத்திலேயே அபராதம் வசூலிப்பதுடன், அவர்களுடைய ஓட்டுனர் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்ய முடியும்.

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டும் இன்றி பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணியவேண்டும் என சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ‘ஹெல்மெட்’ அணியவில்லை என்றால் அவர்களை கண்காணித்து அபராதம் விதிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நகர பகுதிகளில் 90 சதவீதம் பேர் இருசக்கரவாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து தான் செல்கிறார்கள். கிராமப் புறங்களில் தான் போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை. 7½ கோடி மக்கள்தொகை உள்ள தமிழகத்தில் படிப்படியாக தான் சட்டத்தை அமல்படுத்த முடியும்.

சென்னையை தொடர்ந்து கோவை, திருச்சி நகரங்களிலும் மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story