நேரடி நெல் விதைப்பு அதிக பரப்பளவில் மேற்கொள்ள நடவடிக்கை வேளாண்மைத்துறை இயக்குனர் வேண்டுகோள்


நேரடி நெல் விதைப்பு அதிக பரப்பளவில் மேற்கொள்ள நடவடிக்கை வேளாண்மைத்துறை இயக்குனர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 5:15 PM GMT)

நேரடி நெல் விதைப்பு அதிக பரப்பளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 8 மாவட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கான வேளாண்துறை அலுவலர்களுக்கான சம்பா சாகுபடி முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:-

நேரடி நெல் விதைப்பு

அதிக அளவு பரப்பில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவித்திட வருவாய் கிராமம் வாரியாக சிறப்பு முனைப்பு இயக்கங்கள் நடத்தி நேரடி நெல் விதைப்பின் பயன்களை வேளாண்மை உதவி இயக்குனர்கள் விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

மேலும் சம்பா பருவத்திற்கு தேவையான சான்று பெற்ற நெல் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் ரசாயன உரங்கள், அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

உழவு எந்திரங்கள்

தேவையான உழவு எந்திரங்கள், விதைப்பு எந்திரங்கள் மற்றும் நடவு எந்திரங்கள் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் பொறியியல் துறை மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் தேவைப்படும் இடங்களுக்கு மாறுதல் செய்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைத்திட ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் டெல்டா மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்கள், கோவை விதை ஆய்வு இணை இயக்குனர், வேளாண்மை துணை இயக்குனர்கள், வேளாண்மை உதவி இயக்குனர்கள், விதை ஆய்வு துணை இயக்குனர்கள் மற்றும் விதைசான்று உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர்(மாநில திட்டம்) கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குனர் அப்பன்ராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரம், தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் தனசேகரன் ஆகியோர் மாவட்டம் வாரியாக ஆய்வு மேற்கொண்டனர்.

கலந்துரையாடல்

பின்னர் வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தஞ்சை வட்டாரத்தில் உள்ள மேலவெளி வருவாய் கிராமத்தில் மண் வளத்தை அதிகரித்திட பசுந்தாள் உர விதைப்பு, பாய் நாற்றங்கால் தயாரிப்பு பணி மற்றும் எந்திர நடவுப்பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு பிரதான் மந்திரி கிசான் மந்தான் யோஜனா, உழவர் பென்சன் திட்டத்தின்கீழ் விவசாயிகளை இணைத்து அதற்கான அட்டைகள் வழங்கும் பணியினை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது இணை இயக்குனர் நெடுஞ்செழியன், துணை இயக்குனர்கள் ஜஸ்டின், மதியரசன், கணேசன் மற்றும் தஞ்சை வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story